×

ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயம்: செங்கல்பட்டை சேர்ந்தவர்கள்

சேலம்: ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் செங்கல்பட்டை சேர்ந்த 18 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகேயுள்ள திருமூர்த்திமலை மேட்டுத்தெருவில் வசிக்கும் இளைஞர்கள் 19 பேர், நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா புறப்பட்டு வந்தனர். அவர்கள், ஏற்காட்டில் ஒரு நாள் தங்கியிருந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். நேற்று மதியம், மீண்டும் ஊர் திரும்ப சுற்றுலா வேனில் புறப்பட்டனர். ஏற்காட்டில் இருந்து மலைப்பாதை வழியே சேலத்திற்கு வந்தநிலையில், அடிவாரத்தில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடியது.இதில், மலைப்பாதையின் தடுப்பு சுவரில் மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. உள்ளே இருந்த இளைஞர்கள், இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழ்ந்த வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐக்கள் மோனிகா, துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இந்த விபத்தில், தினேஷ் (20), ராம் (27), பாலாஜி (26), லோகேஷ் (22), கிரண் (23), பிரவீன் (22), முத்து (27), விக்னேஷ் (20), நிதிஷ் (18), குருமூர்த்தி (23), கணேஷ் (24), பாரதிராஜா (25), ராஜா (25), அஜித்குமார் (25), சூர்யா (19), ராஜேஷ்குமார் (19), ஹரிகரன் (20), கோகுல் (24) ஆகிய 18 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த சுற்றுலா வேனை கிரேன் கொண்டு தூக்கினர். விசாரணையில், வேனை கணேஷ் என்பவர் ஓட்டி வந்ததும், முதல் வளைவு பகுதியில் இறங்கி வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காததால் வலதுபுறம் திருப்பு தடுப்பு சுவரில் மோதச் செய்துவேன், பள்ளத்தில் கவிழ்ந்ததும் தெரியவந்தது.

The post ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயம்: செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Chengalpatt ,Salem ,Tirumurthimalai Metutheru ,Pallavaram, Chengalpattu district ,Yercaud, Salem district ,Van ,Chengalpattu ,
× RELATED மே 22-ல் ஏற்காடு கோடை விழா: சேலம் ஆட்சியர் அறிவிப்பு